எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தொனன தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவர்
காலத்தைத் தூவி விசிறும் பகல் கனவுகள்
ஏன் காணப்படுகின்றன
மணல் புயல்களின் சூறைகளை
மூடிக்கொண்டிருக்கும் புற்றுகளின் சுரங்கங்கள்
இடம்பெயரக் கூடியது.
புற்று மணல் நிறம் மாறி மாறி
கனவின் சாயலை உமிழ்கின்றது
சமிக்ஞைகள் வழங்கப்பட்ட எறும்புகள்
புற்றிலிருந்து விரைகின்றன.
மர்மங்கள் வெளியேறும்
மணிக்கட்டின் அறுந்த நரம்பிலிருந்து
வழியும் குருதியில்
அந்தியின் சூரிய ஒளி பட்டு ஒளிர்கிறது